Monday, July 15, 2024

TNPSC CURRENT AFFAIARS JULY 2024

  • புதிய மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2022ம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது. அந்த குழு தயார் செய்த அறிக்கையில், தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும், தேசிய கல்விக் கொள்கையில் தெரிவித்தபடி 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த தேவையில்லை, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றன. (ஜூலை 1)
  • சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் ரூ,14,25 கோடி மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் யுனானி மருத்துவ பிரிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். (ஜூன் 30)
  • கனடாவின் ராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளதை அடுத்து புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரி ஜென்னி கரிக்னன் நியமிக்கப்பட்டார். இதன்மூலம், கனடா வரலாற்றில் ராணுவ தளபதியாகும் முதல் பெண் என்ற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றார். (ஜூலை 4)
  • இங்கிலாந்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 412 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து தொழிலாளர் கட்சியின் தலைவரான கீர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றார். இந்த தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட உமா குமரன் என்ற தமிழ்ப் பெண் வெற்றி பெற்று, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் பெண் எம் பி என்ற சாதனையைப் படைத்தார். (ஜூலை 5)
  • இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது, குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக இந்திய தண்டனை சட்டம் (ஐ பி சி ), குற்றவியல் நடைமுறை சட்டம் (சி ஆர் பி சி ), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐ இ சி ) என 3 விதமான சட்டங்கள் இருந்தன. அதற்கு பதிலாக தற்போது பாரதிய நியாய சன்ஹிதா (பி என் எஸ் ), பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா (பி என் எஸ் எஸ் ), பாரதிய சாட்சிய அதினியம் என்ற புதிய 3 குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. இவை, குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும், போலீஸ் நிலையங்களை சாமானியர்கள் எளிதில் அணுகுவதற்கும் வழிவகை செய்கின்றன. (ஜூலை 1)
  • இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்த மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி பொறுப்பேற்றார். இவர் இந்திய ராணுவத்தின் 30வது தலைமை தளபதி ஆவார். (ஜூன் 30)
  • முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை, அரசியல் பயணம் குறித்த ‘வெங்கையா நாயுடு - லைப் இன் சர்வீஸ்’, ‘செலிபிரேட்டிங் பாரத் - 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடுவின் இலக்கை நோக்கிய பயணம் மற்றும் செய்தி’, ‘மகாநேதா - வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை மற்றும் பயணம்’ என்ற 3 நூல்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வெளியிட்டார். (ஜூன் 30)
  • மராட்டிய மாநில தலைமைச் செயலாளராக இருந்த நிதின் கரீர் ஓய்வுபெற்றதை அடுத்து மராட்டிய மாநிலத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளராக சுஜாதா சவுனிக் பதவியேற்றார். (ஜூலை 1)
  • உக்ரைன்-ரஷியா போரில் ஐரோப்பிய நாடான பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் பெலாரஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வந்த நிலையில், தற்போது தங்கம், வைரம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளது. (ஜூன் 30)
  • கடந்த 2023, 24ம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ,1 லட்சத்து 26 ஆயிரத்து 887 கோடியாக உயர்ந்துள்ளது. அதில் பொதுத்துறை நிறுவனங்கள் 79,2 சதவீத தளவாடங்களையும், தனியார் துறை 20,8 சதவீத தளவாடங்களையும் உற்பத்தி செய்துள்ளன. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 16,7 சதவீத வளர்ச்சி ஆகும். (ஜூலை 5)
  • ஜப்பானின் தனேகாஷியா தீவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து எச் 3 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட அலாஸ் 4 என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுபாதையில் நிலைநிறுத்தப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைக்கு உதவிகரமாக இருக்கும் என ஜப்பான் அரசு தெரிவித்தது. (ஜூலை 1)
  • சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் நாக்பூரைச் சேர்ந்த ‘எகனாமிக் எக்ஸ்புளோசிவ்ஸ் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனம் ‘செபெக்ஸ் 2’ என்ற புதிய வகை வெடிகுண்டை தயாரித்து உள்ளது. இது டிஎன்டி வெடிகுண்டை விட 2,01 மடங்கு சக்தி வாய்ந்தது ஆகும். இந்த புதிய வெடிகுண்டின் சோதனை இந்திய கடற்படையால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. (ஜூலை 1)
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முதல்முதலாக சூரியனை ஆய்வு செய்ய கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா எல் 1 விண்கலத்தை விண்ணில் ஏவியது. சூரியன், பூமி இடையே 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் எல் 1 புள்ளியில், ஆதித்யா எல் 1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த நிலையில் எல் 1 புள்ளியைச் சுற்றி தனது முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை ஆதித்யா எல் 1 விண்கலம் நிறைவு செய்ததாக இஸ்ரோ தெரிவித்தது. (ஜூலை 2)
  • 9வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பிரிஜ்டவுனில் மோதின. அதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது. கடைசியாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. (ஜூன் 29)
  • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடைபெறுகிறது. அதில் கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய இளம் வீரர் குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் மோதுகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சிங்கப்பூரில் நடத்தப்படும் என்று சர்வதேச செஸ் சம்மேளனம் (பிடே) அறிவித்தது. (ஜூலை 1)
  • 63வது தேசிய சீனியர் தடகள போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்றது. அதில் அரியானா அணி 133 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக அணி 3 தங்கம், 9 வெள்ளி உள்பட 18 பதக்கங்களை பெற்று 122 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தது. (ஜூலை 1)


No comments:

Popular Posts